உ. இராதாகிருஷ்ணன் - தமிழ் விக்கிப்பீடியா
- ️Sun Jun 27 1943
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உ. இராதாகிருஷ்ணன் | |
---|---|
பிறப்பு | இராதாகிருஷ்ணன் சூன் 27, 1943 இணுவில், யாழ்ப்பாணம், இலங்கை |
இறப்பு | செப்டம்பர் 6, 2015 (அகவை 72) நல்லூர் (யாழ்ப்பாணம்) |
இருப்பிடம் | யாழ்ப்பாணம் |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | வயலின் கலைஞர் |
சமயம் | இந்து |
பெற்றோர் | உருத்திராபதி, தையலம்மாள் |
பிள்ளைகள் | சைந்தவி, ரகுகுலன் |
உருத்திராபதி இராதாகிருஷ்ணன் (27 சூன் 1943 - 6 செப்டம்பர் 2015) இலங்கைத் தமிழ் கருநாடக வயலின் இசைக் கலைஞர் ஆவார்.
வாழ்க்கைச் சுருக்கம்
[தொகு]
இராதாகிருஷ்ணன் யாழ்ப்பாணம் இணுவிலில் உருத்திராபதி, தையலம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர்.[1] தந்தை உருத்திராபதி நாதசுவரம், வயலின் இசைப்பதிலும் திறமை பெற்றவர். இராதாகிருஷ்ணனும் தந்தையிடமே வயலின் மீட்டக் கற்றுக் கொண்டார்.[1] பின்னர் தமிழ்நாடு சென்று பரூர் எம். எஸ். அனந்தராமன் என்பவரிடம் வயலினும், தஞ்சாவூர் எம். தியாகராஜனிடம் வாய்ப்பாட்டும் கற்றுக் கொண்டார்.[1]
யாழ்ப்பாணத்தில் மதுரை சோமு, சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை, தஞ்சாவூர் டி. எம். தியாகராஜன், மகாராஜபுரம் சந்தானம் ஆகியோருக்கு வயலின் வாசித்தார்.[1] யாழ்ப்பாணத்தில் கண்ணன் இசைக்குழுவில் சேர்ந்து வயலின் இசைக்கலைஞராகப் பணியாற்றினார். பின்னர் மிருதங்கக் கலைஞர் சிவபாதம், மெல்லிசைப் பாடகர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன் இணைந்து "சிவராதாகிருஷ்ணமூர்த்தி குழு" என்ற பெயரில் தனியாக ஓர் இசைக்குழுவை ஆரம்பித்தார்.[1] யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நீண்ட காலம் வருகை விரிவுரையாளராகப் பணியாற்றினார். இவரது தனியிசைக்கச்சேரிகள் இறுவட்டுகளாக "கானாமிருதம்" என்ற பெயரில் வெளிவந்துள்ளன.[1]
2015 செப்டம்பர் 6 அன்று மாலை 6.30 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லூரில் துர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம்பெற்ற இசையரங்கில் இராதாகிருஷ்ணன் வயலின் வாசித்துக்கொண்டிருந்த வேளையில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு காலமானார்.[2] இக்கச்சேரியில் அவரது மகள் சைந்தவி வயலினும், மகன் இரகுகுலன் மிருதங்கமும் வாசித்துக் கொண்டிருந்தனர். இராதாகிருஷ்ணனின் சகோதரர் சந்தானகிருஷ்ணனும் ஒரு புகழ் பெற்ற வயலின் இசைக்கலைஞர் ஆவார்.[1]