சி. சரவணபவன் - தமிழ் விக்கிப்பீடியா
- ️Tue Feb 28 1933
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி. சரவணபவன் | |
---|---|
![]() 1960களில் சிற்பி சரவணபவன் | |
பிறப்பு | 28 பெப்ரவரி 1933 காரைநகர், யாழ்ப்பாண மாவட்டம், இலங்கை |
இறப்பு | நவம்பர் 9, 2015 (அகவை 82) கொழும்பு, இலங்கை |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
மற்ற பெயர்கள் | சிற்பி |
கல்வி | சென்னை கிறித்துவக் கல்லூரி, ஸ்கந்தவரோதயா கல்லூரி |
பணி | ஆசிரியர் |
அறியப்படுவது | எழுத்தாளர், இதழாசிரியர் |
சமயம் | இந்து |
பெற்றோர் | சிவசுப்பிரமணியக் குருக்கள், சௌந்தராம்பாள் |
வாழ்க்கைத் துணை | சரசுவதி |
பிள்ளைகள் | சுந்தரேசுவரன், சாயீசுவரன், சர்வேசுவரன் |
சிற்பி சி. சரவணபவன் (28 பெப்ரவரி 1933 - 9 நவம்பர் 2015) ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஓர் எழுத்தாளர். சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், இதழாசிரியர் எனப் பல தளங்களிலும் இயங்கியவர். கலைச்செல்வி இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர்.[1]
சிவசரவணபவன் 1933 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மாவட்டம் காரைநகரில்[1] சிவசுப்பிரமணியக் குருக்கள், சௌந்தராம்பாள் ஆகியோருக்குப் பிறந்தவர். கந்தரோடையில் வாழ்ந்து வந்தவர். கந்தரோடை தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், ஸ்கந்தவரோதயா கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் கற்று பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் உயர்கல்வி பயின்று பட்டம் பெற்றார். யாழ்ப்பாணம் திருநெல்வேலி செங்குந்த இந்துக் கல்லூரியில் ஆசிரியராகவும், உசன் இராமநாதன் மகா வித்தியாலயம், யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம் ஆகியவற்றில் அதிபராகவும் பணியாற்றினார்.
1953 இல் சென்னையில் கல்வி கற்கும் வேளையில் செலையூர் மன்றம் வெளியிட்ட இளந்தமிழன் என்ற இதழின் ஆசிரியரானார். திருநெல்வேலி அவ்வை தமிழ்ச்சங்கத்தினர் நடத்திய கட்டுரைப் போட்டியில் பங்குபற்றி பரிசு பெற்றார்.
சிற்பியின் முதற் சிறுகதையான மலர்ந்த காதல் 1952 இல் சுதந்திரனில் பிரசுரமானது. 1955 இல் உதயம் சஞ்சிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது மறுமணம் என்ற சிறுகதை முதற்பரிசினைப் பெற்றது. ஈழத்தின் பல்வேறு பத்திரிகைகளிலும் தமிழக சஞ்சிகைகளான கல்கி, மஞ்சரி, புதுமை, கலைமகள், தீபம் ஆகிய சஞ்சிகைகளிலும் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. அக்காலப்பகுதியில் திருவல்லிக்கேணி ஒளவை தமிழ்ச்சங்கம் நடத்திய கட்டுரைப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றார். சென்னை திருத்துவக் கல்லூரியில் தமிழ் மொழிக்கான ராஜா சேதுபதி தங்கப் பதக்கத்தைப் பெற்றார். ஈழத்து எழுத்தாளர் பன்னிரண்டு பேரின் சிறுகதைகளைத் தொகுத்து 1958 இல் ஈழத்துச் சிறுகதைகள் என்னும் சிறுகதைத் தொகுப்பைக் கந்தரோடைத் தமிழருவிப் பதிப்பகம் மூலம் வெளியிட்டார். ஈழத்து எழுத்தாளர்கள் பலரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டது இதுவே முதற்தடவையாகும்.
சிற்பி சரவணபவன் 1958 சூலை முதல் வெளிவரத்தொடங்கிய சஞ்சிகையான கலைச்செல்வியின் ஆசிரியர் ஆவார். கலைச்செல்வியின் கடைசி இதழ் 1966 ஆவணியில் வெளியானது.
- நினைவுகள் மடிவதில்லை நூலுக்கு யாழ் இலக்கிய வட்டம் – இலங்கை இலங்கைப் பேரவையின் 2008-2009 சிறந்த தமிழ் நூல்களுக்கான விருது[2]
- எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது 2011[3]
- நிலவும் நினைவும் - சிறுகதைத்தொகுதி
- சத்திய தரிசனம் - சிறுகதைத்தொகுதி
- உனக்காகக் கண்ணே - நாவல்
- நினைவுகள் மடிவதில்லை
- ↑ 1.0 1.1 "ஈழத்து மூத்த எழுத்தாளர் சிற்பி காலமானார்". உலகத் தமிழ்ச் செய்திகள். 9 நவம்பர் 2015. Retrieved 11 நவம்பர் 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "நிகழ்வுகள் மூன்று". Retrieved 11 நவம்பர் 2015.
- ↑ "தமிழியல் விருது வழங்கும் விழா". தமிழ் மிரர். 20 செப்டம்பர் 2012. Retrieved 11 நவம்பர் 2015.